படம்: கோவா
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடல்கள்: கவிஞர் வாலி, கவிஞர் கங்கை அமரன் (நாமாவது இவருக்கு கவிஞர் பட்டம் கொடுப்போமே)
தயாரிப்பு: செளந்தர்யா ரஜினிகாந்த்
இயக்கம்: வெங்கட்பிரபு
கோவா....... 80/90களில் கொடிகட்டிபறந்த கலைஞர்களின் வாரிசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் என்பதாலும், வெங்கட்பிரபு, யுவன், வாலி/அமர் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் என்பதாலும் படத்தை பற்றியும் அதன் பாடல்கள் பற்றியும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள்.
படத்தின் டைட்டிலை பாட்டிலும் கிளாஸுமாக டிசைன் செய்துள்ளதை பார்த்தாலே தெரியும், படத்தின் படத்தின்/பாடல்களின் நோக்கம் ஜாலி ஜாலி ஜாலி......மொத்தமுள்ள 8பாடல்களில் இருகவிஞர்களும் தலா 4 பாடல்கள் வீதம் எழுதியுள்ளார்கள்.
1. பெருங்கூட்டமே பாடியிருக்கும் இளைமை துள்ளலான வெஸ்ட்ரன் இசையில் வரும் "கோவா" தீம் சாங் தான் இந்த ஆல்பத்தின் பெஸ்ட் என்று கூறலாம், பாடல் முழுவதும் விதவிதமான ஒலிகளை கேட்கமுடிகிறது( 2வது சரணத்திற்கு முன்பு வரும் இசை, சிவாஜி படத்தில் ஒரு சண்டை காட்சி பாடலில் ரகுமான் பயன்படுத்திய இசையாச்சே, தவிர்த்திருக்கலாம்), பாடல் ஆரம்பிக்கும் போதே,வாலி " பியூட்டீஸ், டூ பீஸ்" என்று அடுக்கினாலும் பாடல் முழுவதும் கோவா பற்றி அதன் பாணியிலே இளமை துள்ள விளக்குகிறார்.
"தடாவும் பொடாவும்
நம் திக்கிற்குள் நிற்காதது
கனாவும் வினாவும்
நம் கண்விட்டு போகாதது" என்றும்
வெங்கட் பிரபுவிற்காக...
"வெற்றிக்கொடி கட்டி
ஹாட்ரிக் அடி" என்று சிக்ஸர் அடிக்கும் வாலி,
"கோ என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
கோ என்றது கோவா; துன்பங்களை
வா என்றது கோவா; இன்பங்களை" என்று
தீம் சாங்கிற்கு ஏற்ப "கோவா" என்ற அந்த இரண்டெழுத்து வார்த்தைக்குள் அத்தனை ஜாலம் காட்டுகிறார் இரண்டெழுத்து கவிஞர் வாலி.
2. இசைவாரிசுகள் 5 போரும் பாடியிருக்கும் குடும்ப பாடலான "ஏழேழு தலைமுறைக்கும்" என்ற பாடலை கேட்கும் போது காணமல் போன இளையராஜாவை கண்டெடுத்த உற்சாகம் ஊற்றெடுப்பது என்னவோ உன்மை (சகலகலா வல்லவன் பாடல் நினைவிற்கு வருவதும் உன்மை).
சரணத்தில் குடும்பத்தின் பெருமை பேசுவதோடு, தேனி மாவட்ட பெருமைகளையும் காதில் தேனாய் பாய்ச்சும் கங்கை அமரன்,
"முல்லையாறு முதன் முதலா
முத்தமிடும் அந்த இடம்" எனும் போது சமகால நிகழ்வுகளையும் அதனோடு சேர்த்துக்கொள்கிறார்.
3. பென்னி தயாள், மம்தா மோகன்தாஸுடன் இணைந்து பாடியிருக்கும் "இடை வழி" என்ற இந்த பாடல் அழகிய பழகிய மெட்டு என்றாலும் பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையே யுவன் தவழவிடும் அந்த வீணை இசையும் இரண்டாவது சரணத்திற்கு முன்பு கோரஸோடு வரும் அதிரடி இசையும் உன்மையிலே அபாராம்.
"இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடை வெளி இன்றி காதல் செய்
ஓ சினேகிதா....
விழி வழி ஒரு ஊடல் செய்
விரல் வழி ஒரு தேடல் செய்
வித வித மென கூடல் செய்
ஓ சினேகிதி...."
என்று கவிதையும் தமிழும் போட்டி போட தனது பங்கிற்கு இந்த பாடலை தூக்கி பிடிக்கிறார் வாலி.
"கோவில் பூஜைக்கு தோதான நேரம் எது?" என்று பல்லவியில் புதிர் போட்டு, பாடல் முடியும் போது "ராகு காலம்" என்று முடித்து, காமத்தை ரசனையாக உருவகப்படுத்தும் போது வாலியின் அனுபவத்தை அறியலாம்.
4. அஜீஸ், ஆன்ட்ரியா பாடிய "இதுவரை இல்லாத" என்ற இந்த காதல் பாடல் மெல்லிசை மன்னரின் அந்தக்கால ஹம்மிங்கோடு தொடங்கி யுவனின் ஆரம்ப காலத்திற்கு வருவது அத்தனை அழகு. பாடல் வரிகளிலும் அதனை மெய்ப்பிக்கிறார் கங்கை அமரன்,
" இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது;
பலித்திடும், அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ?"
பல்லவி மட்டுமல்ல சரணத்திலும் கங்கை அமரனின் பேனாவில் காதல் வெள்ளமாய் பொங்கிப்பாய்கிறது, யாரும் நம்ப மாட்டார்கள் இந்த பாடலை எழுதியது கங்கை அமரன் என்று; அந்த அளவிற்கு வித்தியாசம் காட்டியிருக்க்கிறார்.
5. முந்தைய "இதுவரை இல்லாத" மெட்டின் சோக வடிவத்தை யுவன் பாடியுள்ளார், சோகமாக இந்த பாடலை கேட்கும் போது யுவனின் பல பழைய பாடல்கள் நினைவிற்கு வருகிறது, யுவன் இத்தகைய பாடலை பாடமல் தவிர்ப்பது நல்லது. சோக மெட்டிற்கு ஏற்ப கச்சிதமாக வரிகளை மாற்றி எழுதியுள்ளார் கங்கை அமரன்.
6. ராஜா "ஒத்துமையா வாழ்ந்தா" என்றொரு சோகப்பாடலை பாடலை பாடியுள்ளார். இந்த படத்திற்கு இப்படி ஒரு பாடல் தேவையா? என்றுத்தான் என்னத்தான் தோன்றுகிறது, ஜாலியான படம் என்று நம்பி வரும் ரசிகர்களின் நகைப்பிற்கு ஆளாக வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை, கதையின் ஓட்டத்தை விளக்கிக்கூறும் வாலியின் இந்தப்பாடலை இளையராஜா தனியாளாக தூக்கிநிறுத்துகிறார் (பிரசாத்தில் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாக கூறும் தகவல்கள் யுவன் மீது சந்தேகத்தை வலுக்கச்செய்கின்றன).
7. "வாலிபா வா வா" என்ற கங்கை அமரன் எழுதிய இந்த பாடலை ராஜாவுடன் பாலுவும் சித்ராவும் இணைந்து பாடியிருக்கிறார்கள், ரீதிகெளளை என்ற அற்புதமான ராகத்தை அனைவரும் சேர்ந்து (பாலு உட்பட)கொத்து புரோட்டா போடுகிறார்கள் (சித்ரா மட்டும் ஆறுதல் தருகிறார்)அதிலும் ராஜா அபஸ்வரமாக பாடுவதை கேட்க சகிக்கவில்லை எரிச்சல்தான் வருகிறது.ராஜாவும் பாலுவும் இந்த பாடலை பாடமலே இருந்திருக்கலாம். சித்ராவும் கங்கை அமரனும் இரண்டாவது சரணத்தில் இந்த ராகத்திற்கு கொஞ்சமாவது மரியாதை ஏறபடுத்துவது ஆறுதல்.
8. சரண், யுகேந்திரன் பாடிய "அடிடா நையாண்டிய" என்ற பாடல் கலக்கலான திருவிழா பாடல்.யுவன் தான் ஒரு ஆல்ரவுண்டர் என நிறுபிக்கிறார்
முதலில் வரும் பல்லவியை மறுபடியும் பாடாமல் வரியை மாற்றி இளையராஜாவின் புகழ் பாடும் வாலி,
முதல் சரணத்தில் கதை நாயகர்களின் பின்னனியை விளக்கி இரண்டாவது சரணத்தில் திருவிழா மூடுக்கு மாறி,
" கரகம்தான் குலுங்குது
கனகாவின் தலையில
கிழடுங்க கிறங்குது
ராமராஜன் நெனப்பில" எனும் போது குறும்பு கொப்பளிக்கிறது. வாலி இந்த மாதிரி மதுரை மண் மணக்கும் பாட்டெழுதுவது ஆச்சர்யம் தருகிறது.
மொத்தத்தில் கிராமியம், வெஸ்ட்ர்ன், கிளாஸிக்கல், சோகம், காதல், காமம் என்று கலந்து கட்டி,6 வித உணர்வினை கூட்டி சிக்ஸர் அடித்துள்ளார்கள்.
Sunday, January 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment