Monday, January 25, 2010

லீலை திரைப்பட பாடல் விமர்சனம்

படம்: லீலை
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
பாடல்கள்: கவிஞர் வாலி, பா.விஜய்
தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் V.ரவிச்சந்திரன்
இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்




ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளிவந்துவிட்டது(படம் ஏன் இன்னமும் வெளிவரவில்லை என்பது புரியாத புதிர்).

புது இசையமைப்பாளரின் இசையில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் பற்றி நீண்ட நாட்களாகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஒருவழியாக இன்றுதான் அதற்கு (எனக்கு) நேரம் வந்தது.

1. பென்னிதயாள், சுனிதா சாரதி, சுவி, லெனான் ஜேம்ஸ் பாடியிருக்கும் "கொஞ்சம் ஒட்டிப்போ" என்ற பாடல் வரிகளை முழுவதுமாக சரியாக எழுதி அனுப்புவர்களுக்கு படத்தின் ஏதாவது ஒரு ஏரியாவின் விநியோக உரிமை வழங்கப்படும் என்று போட்டியே நடத்தலாம் (வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு, விளம்பரத்திற்கு விளம்பரமும் ஆச்சு). ஓரே இரைச்சல்...... பாடலை எழுதியவர் பா.விஜய் என்று சி.டி கவரை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பாடலைப்பற்றி எழுத எதுவுமில்லை. தாளம் என்னும் வேதாளத்தை ரசிப்பவர்களுக்கு பிடிக்கலாம்.

2. பா.விஜய் எழுதி பென்னிதயாள் பாடியிருக்கும் " பொன்மாலை பொழுது" என்ற பாடல் முழுவதும் கவிநயமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் விஜய், பாடல் வரிகள் முழுவதும் அழகு என்று முடிவது கொள்ளை அழகு, இத்தகைய பாடல்கள் எழுதும்போது இதற்கு முன்பு வந்த பாடல்களின் கருத்துகள் வராமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் அதே நேரம் தனித்து காட்டவேண்டியதும் அவசியம், அதை இந்தபாடலில் பா.விஜய் அழகாக கையாண்டுள்ளார்.
வரிகளையும் வார்த்தைகளையும் சிதைக்காத வாத்திய கருவிகள் மூலம் பாடலை மன‌திற்கு கொண்டுசெல்வதில் இசையமப்பாளர் மனம்கவர்கிறார்.

3. வாலி எழுதி இசையமைப்பாளரே பாடியிருக்கும் "ஜில்லென்று ஒரு கலவரம்" பாடல் மற்றுமொறு மியூசிக்கல் ட்ரீட், ஒரு இசையமைப்பாளார் இவ்வளவு இனிமையாக பாடமுடிவது ஆச்சர்யமூட்டுகிறது, இவர் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொண்டால் பிரபல பாடகராகவும் பரிமளிக்கலாம். பல்லவியில் இளம் கவிஞர்களுக்கு சவால்விடும் வாலி, சரணத்தில் வழக்கமான வாலியாகிவிடுகிறார்.

4. ஹரிச்சரன் பாடிய "உன்னைப்பார்த்த பின்பு" என்ற சோகப்பாடலை, சோகப்பாடல் என்ற சாயலே இல்லாமல் தடதடக்கும் இசையால் வித்தியாசமாக தந்திருக்கிறார்.

" வானம் பார்த்த பின்பு,
பூமி பூத்தது இங்கு"

என்ற வித்தியாசமான கற்பனை மூலமும் (நம்ம ஊரில் வானம் பார்த்த பூமி என்று பூத்தது)

" காதல் என்பது
கடவுள் போன்றது
உள்ளபோதும் இல்லை
என்று எண்ணத்தோன்றும்"
என்று காதலின் வலியை நுட்பமாக ஆராயும் போதும் பளிச்சென தன் அனுபவத்தை காட்டிச்செல்கிறார் வாலி.

5. "ஒரு கிளி ஒரு கிளி" இந்த பாடல்தான் இந்த ஆல்பத்தின் பெஸ்ட் சாங். இசையமைப்பாளர் உடன் இணைந்து பாடியிருப்பது ஷ்ரேயா கோஷல் (பொண்ணு மறுபடியும் மறுபடியும் தேசிய விருது வாங்கிக்கிட்டே இருக்கு வாழ்த்துக்கள்!). இதே பாடலை சதீஷ் மட்டும் சோகமாகவும் பாடியுள்ளார். என்ன சொல்ல மனதை மயிலிறகாய் வருடிச்செல்லும் இசையுடன் கந்தர்வ குரலும் இணைந்து கொண்டால் கேட்க வேண்டுமா? அற்புதமான இசைவிருந்துதான் போங்கள்.....
இந்த பாடலையும் எழுதியிருப்பவர் வாலி.

" விழியல்ல
விரலிது - ஓர்
மடல் வரைந்தது
உயிரல்ல‌
உயிலிது
உனக்குத்தான் உரியது"

என்றும்

"உன் கைகள் தொட நாணம்தான் விடாதோ"

என்றும் எழுதும் போதும் எம்.ஜி.ஆர் காலத்து வாலி நம் கண் முன் தெரிகிறார். டூயட்டிற்கும் சோகப்பாட்டிற்கும் ஒரே வரிகளை அதை அற்புதமாக பொருந்திப் போகும்படி செய்துள்ளார்.

பாடலின் மெட்டில் "வைகாசி நிலவே" (உன்னாலே உன்னாலே) சாயல் வருவதை தவிர்த்திருக்க்கலாம்.



எந்த ஒரு படைப்பாளிக்கும் முதல்படைப்பு மிகமிக முக்கியமாகும், அந்த வகையில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் சதீஷ் சக்ரவர்த்திக்கு இந்த படம் மிகப்பெரிய தொடகக்கமாக அமையவேண்டும் (அமையும்). வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான இசை, செவிகளை உறுத்தாத மெட்டு, நவீன இசைக்கருவிகளை பயன்படுத்தும் விதம் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காருகிறார்.

நண்பர்களே முன்மொழிந்து வழிமொழிகிறேன் பாடலை கேட்டுப்பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.


அன்புடன்

காத்தவராயன்

Sunday, January 17, 2010

கோவா திரைப்பட பாடல் விமர்சனம்

படம்: கோவா
இசை: யுவன்சங்கர் ராஜா
பாடல்கள்: கவிஞர் வாலி, கவிஞர் கங்கை அமரன் (நாமாவது இவருக்கு கவிஞர் பட்டம் கொடுப்போமே)
தயாரிப்பு: செளந்தர்யா ரஜினிகாந்த்
இயக்கம்: வெங்கட்பிரபு


கோவா....... 80/90களில் கொடிகட்டிபறந்த கலைஞர்களின் வாரிசுகள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் என்பதாலும், வெங்கட்பிரபு, யுவன், வாலி/அமர் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் என்பதாலும் படத்தை பற்றியும் அதன் பாடல்கள் பற்றியும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள்.

படத்தின் டைட்டிலை பாட்டிலும் கிளாஸுமாக டிசைன் செய்துள்ளதை பார்த்தாலே தெரியும், படத்தின் படத்தின்/பாடல்களின் நோக்கம் ஜாலி ஜாலி ஜாலி......மொத்தமுள்ள 8பாடல்களில் இருகவிஞர்களும் தலா 4 பாடல்கள் வீதம் எழுதியுள்ளார்கள்.

1. பெருங்கூட்டமே பாடியிருக்கும் இளைமை துள்ளலான வெஸ்ட்ரன் இசையில் வரும் "கோவா" தீம் சாங் தான் இந்த ஆல்பத்தின் பெஸ்ட் என்று கூறலாம், பாடல் முழுவதும் விதவிதமான ஒலிகளை கேட்கமுடிகிறது( 2வது சரணத்திற்கு முன்பு வரும் இசை, சிவாஜி படத்தில் ஒரு சண்டை காட்சி பாடலில் ரகுமான் பயன்படுத்திய இசையாச்சே, தவிர்த்திருக்கலாம்), பாடல் ஆரம்பிக்கும் போதே,வாலி " பியூட்டீஸ், டூ பீஸ்" என்று அடுக்கினாலும் பாடல் முழுவதும் கோவா பற்றி அதன் பாணியிலே இளமை துள்ள விளக்குகிறார்.

"தடாவும் பொடாவும்
நம் திக்கிற்குள் நிற்காத‌து
கனாவும் வினாவும்
நம் கண்விட்டு போகாத‌து"
என்றும்

வெங்கட் பிரபுவிற்காக...

"வெற்றிக்கொடி கட்டி
ஹாட்ரிக் அடி"
என்று சிக்ஸர் அடிக்கும் வாலி,

"கோ என்பது முன் வார்த்தைதான்
வா என்பது பின் வார்த்தைதான்
கோ என்றது கோவா; துன்பங்களை
வா என்றது கோவா; இன்பங்களை"
என்று

தீம் சாங்கிற்கு ஏற்ப "கோவா" என்ற அந்த இரண்டெழுத்து வார்த்தைக்குள் அத்தனை ஜாலம் காட்டுகிறார் இரண்டெழுத்து கவிஞர் வாலி.



2. இசைவாரிசுகள் 5 போரும் பாடியிருக்கும் குடும்ப பாடலான "ஏழேழு தலைமுறைக்கும்" என்ற பாடலை கேட்கும் போது காணமல் போன இளையராஜாவை கண்டெடுத்த உற்சாகம் ஊற்றெடுப்பது என்னவோ உன்மை (சகலகலா வல்லவன் பாடல் நினைவிற்கு வருவதும் உன்மை).

சரண‌த்தில் குடும்பத்தின் பெருமை பேசுவதோடு, தேனி மாவட்ட பெருமைகளையும் காதில் தேனாய் பாய்ச்சும் கங்கை அமரன்,
"முல்லையாறு முதன் முதலா
முத்தமிடும் அந்த இடம்"
எனும் போது சமகால நிகழ்வுகளையும் அதனோடு சேர்த்துக்கொள்கிறார்.



3. பென்னி தயாள், மம்தா மோகன்தாஸுடன் இணைந்து பாடியிருக்கும் "இடை வழி" என்ற‌ இந்த பாடல் அழகிய‌ பழகிய மெட்டு என்றாலும் பல்லவிக்கும் முதல் சரணத்திற்கும் இடையே யுவன் தவழவிடும் அந்த வீணை இசையும் இரண்டாவது சரணத்திற்கு முன்பு கோரஸோடு வரும் அதிரடி இசையும் உன்மையிலே அபாராம்.

"இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடை வெளி இன்றி காதல் செய்
ஓ சினேகிதா....
விழி வழி ஒரு ஊடல் செய்
விரல் வழி ஒரு தேடல் செய்
வித வித மென கூடல் செய்
ஓ சினேகிதி...."

என்று கவிதையும் தமிழும் போட்டி போட தனது பங்கிற்கு இந்த பாடலை தூக்கி பிடிக்கிறார் வாலி.


"கோவில் பூஜைக்கு தோதான நேரம் எது?" என்று பல்லவியில் புதிர் போட்டு, பாடல் முடியும் போது "ராகு காலம்" என்று முடித்து, காமத்தை ரசனையாக உருவகப்படுத்தும் போது வாலியின் அனுபவத்தை அறியலாம்.


4. அஜீஸ், ஆன்ட்ரியா பாடிய "இதுவரை இல்லாத" என்ற‌ இந்த காதல் பாடல் மெல்லிசை மன்னரின் அந்தக்கால ஹம்மிங்கோடு தொடங்கி யுவனின் ஆரம்ப காலத்திற்கு வருவது அத்தனை அழகு. பாடல் வரிகளிலும் அதனை மெய்ப்பிக்கிறார் கங்கை அமரன்,

" இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கன‌விது;
பலித்திடும், அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ?"

பல்லவி மட்டுமல்ல சரணத்திலும் கங்கை அமரனின் பேனாவில் காதல் வெள்ளமாய் பொங்கிப்பாய்கிறது, யாரும் நம்ப மாட்டார்கள் இந்த பாடலை எழுதியது கங்கை அமரன் என்று; அந்த அளவிற்கு வித்தியாசம் காட்டியிருக்க்கிறார்.



5. முந்தைய "இதுவரை இல்லாத" மெட்டின் சோக வடிவத்தை யுவன் பாடியுள்ளார், சோகமாக இந்த பாடலை கேட்கும் போது யுவனின் பல பழைய பாடல்கள் நினைவிற்கு வருகிறது, யுவன் இத்தகைய பாடலை பாடமல் தவிர்ப்பது நல்லது. சோக மெட்டிற்கு ஏற்ப கச்சிதமாக வரிகளை மாற்றி எழுதியுள்ளார் கங்கை அமரன்.



6. ராஜா "ஒத்துமையா வாழ்ந்தா" என்றொரு சோகப்பாடலை பாடலை பாடியுள்ளார். இந்த படத்திற்கு இப்படி ஒரு பாடல் தேவையா? என்றுத்தான் என்னத்தான் தோன்றுகிறது, ஜாலியான படம் என்று நம்பி வரும் ரசிகர்களின் நகைப்பிற்கு ஆளாக வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை, கதையின் ஓட்டத்தை விளக்கிக்கூறும் வாலியின் இந்தப்பாடலை இளையராஜா தனியாளாக தூக்கிநிறுத்துகிறார் (பிரசாத்தில் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாக கூறும் தகவல்கள் யுவன் மீது சந்தேகத்தை வலுக்கச்செய்கின்றன).



7. "வாலிபா வா வா" என்ற கங்கை அமரன் எழுதிய இந்த பாடலை ராஜாவுடன் பாலுவும் சித்ராவும் இணைந்து பாடியிருக்கிறார்கள், ரீதிகெளளை என்ற அற்புதமான ராகத்தை அனைவரும் சேர்ந்து (பாலு உட்பட)கொத்து புரோட்டா போடுகிறார்கள் (சித்ரா மட்டும் ஆறுதல் தருகிறார்)அதிலும் ராஜா அபஸ்வரமாக பாடுவதை கேட்க சகிக்கவில்லை எரிச்சல்தான் வருகிறது.ராஜாவும் பாலுவும் இந்த பாடலை பாடமலே இருந்திருக்கலாம். சித்ராவும் கங்கை அமரனும் இரண்டாவது சரணத்தில் இந்த ராகத்திற்கு கொஞ்சமாவது மரியாதை ஏறபடுத்துவது ஆறுதல்.



8. சரண், யுகேந்திரன் பாடிய "அடிடா நையாண்டிய" என்ற பாடல் கலக்கலான திருவிழா பாடல்.யுவன் தான் ஒரு ஆல்ரவுண்டர் என நிறுபிக்கிறார்

முதலில் வரும் பல்லவியை மறுபடியும் பாடாமல் வரியை மாற்றி இளையராஜாவின் புகழ் பாடும் வாலி,

முதல் சரணத்தில் கதை நாயகர்களின் பின்னனியை விள‌க்கி இரண்டாவது சரணத்தில் திருவிழா மூடுக்கு மாறி,

" கரகம்தான் குலுங்குது
கனகாவின் தலையில‌
கிழடுங்க கிறங்குது
ராமராஜன் நெனப்பில"
எனும் போது குறும்பு கொப்பளிக்கிறது. வாலி இந்த மாதிரி மதுரை மண் மணக்கும் பாட்டெழுதுவது ஆச்சர்யம் தருகிறது.


மொத்தத்தில் கிராமியம், வெஸ்ட்ர்ன், கிளாஸிக்கல், சோகம், காதல், காமம் என்று கலந்து கட்டி,6 வித உணர்வினை கூட்டி சிக்ஸர் அடித்துள்ளார்கள்.